Friday 17th May 2024

தலைப்புச் செய்தி :

இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை,

இந்தியாவில் பிரதமர் பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த்

நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

தே.மு.தி.க.அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியாவின் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போகிறது. இதற்காக எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் உள்ள ஏழை–எளிய மக்களின் தேவைகள் நிறைவேறவும், குஜராத்தை போன்று ஊழலற்ற, நேர்மையான அரசு மத்தியிலும் உங்கள் தலைமையிலான அரசு செய்யும் என்று நான் நம்புகிறேன்.

இந்தியாவில் நிலவி வரும் ஏழ்மை இனி உங்களால் ஒழிக்கப்பட்டு இந்தியாவில் புதிய பொருளாதார வளர்ச்சியை உங்கள் தலைமையிலான அரசு ஏற்படுத்தும் என்று நான் உளமாற நம்புகிறேன். சிறப்பு வாய்ந்த அரசு இந்தியாவில் உருவானதும் அதற்கான பிரதமராக நீங்கள் பதவியேற்க இருப்பதையும் நான் மீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அனுப்பியுள்ள வாழ்த்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்தியாவில் நடைபெற்ற 16–வது பாராளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றமைக்காக நான் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் 15–வது பிரதமராக பதவியேற்க இருப்பதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத் மாநிலத்தில் எட்டப்பட்டது போன்ற வளர்ச்சி தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பயனளிக்கும் என்பதை இந்திய மக்கள் நன்றாக உணர்ந்திருப்பதால், உங்களிடமிருந்து மக்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.

தமிழகத்தில் நமது கூட்டணி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்ற போதிலும், இரு தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் நமது கூட்டணியின் எதிர்காலத்துக்கு இது வகை செய்யும். தமிழகத்தின் நலன் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குறுதிகளையும் தாங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வைகோ

ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அகில இந்திய அளவில் நரேந்திர மோடி ஆதரவு பேரலை மிகப் பெரும்பான்மையான மாநிலங்களில் வீசியதால் பா.ஜ.க.நாடாளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை பெறவும், தேசிய ஜனநாயக கூட்டணி பிரமிக்கத்தக்க மகத்தான வெற்றி பெறவும் வாக்காளப் பெருமக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று பிரதமர் பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் வாக்காளர் பெருமக்கள் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம், ம.தி.மு.க. ஊழலற்ற, நேர்மையான அரசியலை வென்றெடுக்கவும், தன்னலமற்ற மக்கள் பொதுத்தொண்டை முன்னெடுக்கவும் உறுதிகொண்டு தொடர்ந்து பாடுபடும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து கட்சி வோட்பாளர்களுக்கும், அக்கட்சியின் தலைவர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க இதுவரை கண்டிராத பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதற்காக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மக்களின் தீர்ப்பை ஏற்று, மதித்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். வெற்றி பெற்றுள்ளோர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு தா.பாண்டியன் கூறியுள்ளார்.

பாரிவேந்தர்

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ 10 ஆண்டு கால மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த பெரு வெற்றியை பா.ஜ.க.வுக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். அனைவரும் போற்றும் வகையில் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலம் நாட்டின் பொற்காலமாக திகழ்ந்தது. அதையும் தாண்டி அடுத்த வளர்ச்சிக் கட்டத்துக்கு நாட்டை நரேந்திர மோடி அழைத்து செல்வார். நாடு முழுவதும் பெரும் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கும், பிரதமராக பொறுப்பு ஏற்க உள்ள நரேந்திர மோடிக்கும் இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

ஏ.சி.சண்முகம்

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நரேந்திர மோடியின் தலைமையிலான நல்லாட்சியில், இந்தியா உலகின் முதன்மையான வல்லரசு நாடாக மாறும். இந்தியா முழுவதும் நதிகள் இணைக்கப்பட்டு நம் நாட்டில் பசுமை புரட்சி ஏற்படும். நம் நாட்டின் முக்கிய பல பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காணப்படும். நாளைய பிரதமர் நரேந்திர மோடிக்கும், பா.ஜ.க.வின் அத்தனை தலைவர்களுக்கும் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்களுக்கும், இந்த மாபெரும் வெற்றிக்கு அல்லும், பகலும் அயராது பாடுபட்ட அத்தனை நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்று கூறியுள்ளார்.

ஈ.ஆர்.ஈஸ்வரன்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ இந்தியாவில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் நரேந்திரமோடி தலைமையில் தனி பெரும்பான்மையுடன் அமைய உள்ளது. நரேந்திர மோடி கடின உழைப்புக்கும், அவரது புதிய துடிப்பான அணுகுமுறையும் தான் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது. நரேந்திர மோடிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் டாக்டர் ஆ. மணி அரசனும் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://greensite.in/

Posted by on May 17 2014. Filed under Headlines, இந்தியா, செய்திகள், தமிழகம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech