Wednesday 1st May 2024

தலைப்புச் செய்தி :

கொப்பரை தேங்காய் பிரசாதம்

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு 

பகுதி 9 

முந்தைய பகுதிக்கு செல்ல…  

நிரஞ்சனா

கோலாப்பூரைச் சேர்ந்த சக்காராம் தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 27 வருடம் ஆனது. இருந்தாலும் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனை அடைந்தார்கள். இதனால் உறவினர்களின் அவப் பேச்சுக்கு ஆளானார்கள். சுப நிகழ்ச்சிகளின் கலந்து கொள்ளவே தயங்கும் அளவில் மிக மன வேதனையில் இருந்தார்கள். இதை தெரிந்து கொண்ட சக்காராம் மனைவியின் சகோதரி மகன் விஸ்வநாத், மகான் சீரடி சாய்பாபாவை பற்றி சொன்னார். இதை கேட்ட சக்காராமும் அவருடைய மனைவியும் பாபாவை தரிசித்தால் இறைவன் அருளால் குழந்தைச் வரம் கிடைக்கலாம் என்று நம்பினார்கள். ஷீரடிக்கு சென்று பாபாவை தரிசிக்க விரும்பினார்கள். நம்பிக்கையான வார்த்தையை யாராவது கூறினால் நிச்சயம் அவர்களின் வாக்கு பலிக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையாலேயே அவர்களுடைய கவலை பாதி தீரும். பாபாவை சந்திக்க ஷீரடிக்கு வந்தார்கள்.

ஆனால் பாபாவை தரிசிக்க முடியவில்லை. இரண்டு மாதங்களாக சீரடியிலேயெ தங்கி இருந்தார்கள். இருந்தும் சாய்பாபாவை சந்திக்க முடியவில்லையே என்று வருந்தினார்கள். அந்த நேரத்தில் எந்நேரமும் பாபாவுடன் இருக்கும் ஷாமாவின் நட்பு சக்காராமுக்கு கிடைத்தது. “நீங்கள் கொப்பரை தேங்காயுடன் வாருங்கள். நான் சாய்பாபாவை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். நீச்சயம் பாபா வரம் தருவார்.“என்றார் ஷாமா.

இந்த வார்த்தையை கேட்டவுடன் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தாலும், சாய்பாபாவின் வரத்தால் எங்களுக்கு வரம் கிடைக்குமா? என்றார் சக்காராம். “நம்பிக்கையோடு இருங்கள்“ என்றார் ஷாமா. பெரியவர்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்துவிட்டால் அதை அவர்கள் நமக்காக இறைவனிடம் மன்றாடி நல்லபடியாக செய்து முடிப்பார்கள். அவர்களின் மீது சந்தேகம் கூடாது. கொல்லிமலையில் குருதேவ சித்தர் என்று ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு பெண்மணி தன் மகளை அழைத்து சென்றாள். அவள் ஒரு சிறுமி. தன் மகளுக்கு பேய் பிடித்துவிட்டதாகவும், அதனால் சில மாதங்களாக அவள் ஒரு விதமாக இருப்பதாக கண்ணீர் வடித்தபடியே கூறினாள். அதை கேட்ட சித்தர், பேய் பிடித்ததாக சொல்லப்பட்ட சிறுமியை பார்த்தார்.

“உன் பெயர் என்ன?“ என்றார் சித்தர். “சம்பூர்ணம்“ என்றாள் அந்த சிறுமி. சிறுமியின் தலையில் கை வைத்து மந்திரங்கள் ஓதி விபூதியை நெற்றில் தடவினார். சில வைத்தியங்களும் பார்த்தார். சில நிமிடத்திலேயே அந்த சிறுமி மயங்கி விழுந்தாள். இதை கண்ட தாய் பதறினாள். அதற்கு சித்தர் அந்த தாயிடம், “பயம் வேண்டாம். உன் மகளின் உடலில் இருந்த பேய் ஓடிவிட்டது.“ என்று கூறினாலும் பெற்ற மனம் நம்பவில்லை.

 “சாமி அவளுக்கு பல மாதங்களாக பேய் பிடித்து இருக்கிறது. அது எப்படி சில மணி நேரத்திலேயே அந்த பேயை விரட்டி இருப்பீர்கள்.?.“

 சிரித்தார் சித்தர். “உன் மகளின் உடலில் பேய் இருக்கிறது என்று நீ சொன்னதை நான் நம்பவில்லையா. அதுபோல் உன் மகளின் உடலில் இருந்த பேய்யை நான் விரட்டி விட்டேன் என்று நான் சொன்னதையும் நீ நம்ப வேண்டும்.“ என்றார்.

 ஆனால் அந்த தாய் சமாதானம் அடையவில்லை. ஆனாலும் சித்தர் கோபப்டாமல் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து மஞ்சள் நூலால் அந்த எலுமிச்சை பழத்தை சுற்றி கட்டி, “இந்தா இன்று இரவு இதை உன் மகள் படுக்கும் போது அவள் தலைமாட்டில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தில் இந்த எலுமிச்சை பழத்தை போட்டு வை. மறுநாள் இந்த எலுமிச்சை பழம் கரைந்து இருந்தால், உன் மகள் உடலில் இருந்த பேய் விலகியதாக அர்த்தம்.“ என்றார் சித்தர்.

 தன் மகளை அழைத்து கொண்டு சென்றாள் அந்த தாய். அன்றிரவு, சித்தர் கூறியது போல் அந்த எலுமிச்சை பழத்தை தண்ணீர் பாத்திரத்தில் போட்டு தன் மகள் தலைமாட்டில் வைத்தாள். மறுநாள் விடிந்தவுடன் அவசர அவசரமாக பாத்திரத்தை எட்டி பார்த்தாள்.

 எலுமிச்சை கரைந்து எலுமிச்சையை சுற்றி கட்டபட்டிருந்த அந்த நூல் மட்டும்  தண்ணீரில் மிதந்தது. இதை கண்ட அவள் மகிழ்ந்தாள். தன் மகளின் உடலில் இருந்த பேய் நீங்கி விட்டதாக உறுதியாக நம்பி அக்கம் பக்கத்தில் எல்லோரிடமும் கூறி மகிழ்ந்தாள்.

 இந்த தகவல் குருதேவ சித்தரின் சிஷ்யனுக்கு தெரிந்து தன் குருவிடம், “சுவாமி எனக்கு இந்த சக்தியை கற்று தாருங்கள்.“ என்றான்.

 அதற்கு சித்தர், “இதில் ஒரு சக்தியும் இல்லை. அந்த பெண்ணுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக மஞ்சலை உருண்டையாக்கி, அதில் மஞ்சள் நூலை சுற்றி கட்டி கொடுத்தேன். உன் மகள் உடலில் பேய் இல்லை என்று நான் நூறு கோடி தரம் சொன்னாலும் அந்த பெண்மணி நம்ப மாட்டாள். அதனால் அவளுக்கு நம்பிக்கை வர இப்படி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சீடனே… ஒன்றை நினைவில் வைத்திரு. உலகில் எப்பேர்பட்ட பேய்யை விரட்டினாலும் சந்தேக பேய்யை விரட்டி ஓட்ட முடியாது. அதற்கு இத்தகைய தந்திரம் தவறல்ல.“ என்றார் குருதேவ் சித்தர்.

 இப்படி சந்தேகம் இல்லாத நம்பிக்கைதான் வெற்றியை தரும். ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டால்தான் வெற்றி பெறமுடியும். நமபிக்கையாக வாழ முடியும். இது போல்தான் சக்காராம் தம்பதிகளுக்கு சாய்பாபாவை பார்த்தவுடன் நம்பிக்கை ஏற்பட்டது. சக்காராம் மனைவி சாய்பாபாவை தரிசித்து, “பாபா“ என்று அழைத்தாள். பாபா, அவளை திரும்பி பார்த்தார். சாய்பாபாவின் அருகில் இருந்த ஷாமா, பாபாவின் காதில் ஏதோ சொல்ல, அந்த பெண்மணியை பாபா அழைத்து, “உன் கையில் என்ன.“ என்றார்.

 “கொப்பரை தேங்காய் பாபா. கொப்பரைக்குள் தேங்காய் உருள்வதை போல் அவள் வயிற்றில் குழந்தை உருள வேண்டும் பாபா.“ என்று வேண்டினார் ஷாமா.

 “ஓ அப்படியா…? சரி அந்த தேங்காயை கொடு.“ என்று கூறி அதை உடைத்து ஒரு பங்கை அந்த பெண்ணுக்கு கொடுத்து, “உனக்கு குழந்தை பிறக்கும். பிறந்த ஐந்தாவது மாதத்திலேயே அந்த குழந்தையை எடுத்து கொண்டு இந்த தாத்தாவை அந்த குழந்தையிடம் அறிமுகப்படுத்தி வை. அத்துடன் அந்த குழந்தையின் கைகளால் ஐந்து ரூபாயை காணிக்கையாக கொடு.“ என்ற கூறி அனுப்பினார் பாபா. வரம் பெற்ற மகிழ்ச்சியுடன் ஊருக்கு புறப்பட்டு சென்றார் சக்காராமும் அவன் மனைவியும்.

 பாபா ஆசி தந்தது போல் சக்காராம் மனைவி சில நாட்களிலேயே கருவுற்று, பத்து மாதத்தில் அழகான குழந்தையை பெற்றெடுத்தாள். சாய்பாபாவின் வாய் முகூர்தம் அல்லது சாய்பாபாவின் சக்தியாளோ 27 வருடங்களாக குழந்தையில்லாமல் குமுறிய தம்பதிகளின் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. வம்சம் தழைக்க வாரிசு வந்தது.  மகான் சாய்பாபா அருளியது போல அந்த குழந்தையை ஷீரடிக்கு அழைத்து சென்று சாய்பாபாவின் மடியில் வைத்து ஆசி பெற்று, அந்த குழந்தையின் பிஞ்சு கரங்களால் ஐந்து ரூபாய் காணிக்கையை பெற்றார் பகவான் ஸ்ரீ சாய்பாபா.

 ஒருவர் தீராத காய்ச்சலால் அவதிப்பட்டார். அவருக்கு அவர் வீட்டில் இருந்த உணவு பொருட்களாலேயே காய்ச்சலை தீர்த்தார். மகான். அது என்ன..?

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்

Feedback: editor@bhakthiplanet.com

 இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

 For Astrology consultation Click Here 

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on May 19 2011. Filed under ஆன்மிகம், ஆன்மிகம், ஸ்ரீ சாய்பாபா வரலாறு. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech