Thursday 25th April 2024

தலைப்புச் செய்தி :

“பாபாவின் பார்வையே மகத்துவம்.“- மகான் சீரடி சாயிபாபா வரலாறு. பகுதி – 2

மகான் சீரடி சாயிபாபா

பகுதி – 2

 

சென்ற இதழ் தொடர்ச்சி…

நிரஞ்சனா

தன் குருநாதர் கூறியது போல் கபீர் ஷிரடி சென்றார். இப்போது கபீர்தான் “ஷிரடி சாய்பாபா“ என்று நீங்கள் புரிந்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் அவரை ஷிரடி மக்கள் சாய்பாபா என்று ஆரம்பத்தில் அழைக்கவில்லை. ஆனால் நம் வசதிக்காக இப்போது நாம் இனி கபீரை, சாய்பாபா என்றே அழைப்போம். அங்கு உள்ள மக்கள் பாபாவை ஆச்சரியத்தோடு கண்டார்கள். வெளிநாட்டுக்கு காந்தியடிகள் சென்றபோது அங்கிருந்த மக்கள் காந்திஜியை பிரம்மிப்பாக பார்த்தார்கள். காரணம் – அந்த அளவிற்கு மகாத்மா காந்தி எளிமையாக இருந்தார். அதுபோல் நம்முடைய பாபாவும் சராசரி மனிதர்கள் உடுத்தும் உடை கூட இல்லாமல் தலையில் சிறியமுடி கூட தெரியாத அளவுக்கு துணியை தலையில் சுற்றி இருந்தார். முட்டிக்கு கீழ்வரை நீண்ட அங்கியணிந்திருந்தார். “பார்க்க புது மனிதராக இருக்கிறாரே? உடையை பார்ததால் பைத்தியகாரன் போல் தெரிகிறது.“ என அங்கு கூடியிருந்த மக்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். என்ன செய்வது..? இறைவனே நேரில் வந்து, நான் கடவுள் என்றால், இது படத்தின் வசனமா? சீரியலின் வசனமா? என்று கேட்கும் உலகத்தில் இருக்கும் நாம், எப்படி ஒரு மகானை புரிந்து கொள்ள முடியும்.?

ஆனால் பாபா, அந்த மக்களின் பேச்சை காதில் வாங்கிக்கொள்ளாமல் அவர்களின் அறியாமையை நினைத்து புன்சிரிப்போடு நடந்து கொண்டு இருந்தார். போகும் வழியில் வேப்பமரம் இருந்தது. அந்த மரத்தின் அருகில் பாபா நின்ற உடன் மரத்தின் இலைகளும் கிளைகளும் அசைந்தது. பாபாவை அவை வரவேற்றது. ஆறறிவு இருக்கும் மனிதர்களால் கூட தெரிந்து கொள்ள முடியாத பாபாவின் சக்தியை தன் உணர்ச்சிகளை வெளிகாட்ட தெரியாத மரம் கூட அன்று பாபாவை பார்த்த சந்தோஷமான உணர்வுகளை வெளிப்படுத்தியது. பாபா வேப்பமரத்தடியின் கீழ் அமர்ந்தவுடன் காற்றில் அசைந்து அசைந்து வேப்ப இலைகளால் பாபாவுக்கு அர்ச்சனை செய்தது வேப்பமரம். இதை கண்ட கண்டோபா கோயிலில், அதாவது அவ்வூரின் சிவன் கோவிலில்  பணிபுரியும் பூசாரியாக இருக்கும் மகல் சாபதிக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியது.

 தான் கண்ட காட்சியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.  இருந்தாலும் கதை கேட்பது போல் கேட்டுவிட்டு அவர்கள் கேலியாக பேசினார்கள்.

 “என்ன மகல் சாபதி… நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா…? தென்னை மரத்தில காக்காய் உட்கார்ந்த நேரத்தில் தென்னை ஓலை ஒன்று கீழே விழுந்ததாம். அப்போது அந்த காக்காய் நினைத்ததாம்… தான் இவ்வளவு பலசாலியா? என் உடல் வலிமையை தாங்க முடியாமல் தென்னை ஓலையே விழுந்து விட்டதே.? என்று. அப்படி  இருக்கிறது நீங்கள் சொன்ன கதை.“ என்று எகத்தாளமாக மகல் சாபதியிடம் கூறிவிட்டு போனார்கள் ஷிரடி மக்கள்.

 பாபாவை யாரும் மதிக்கவில்லை. வலிய போய் உதவி வேண்டுமா? என்று கேட்க ஏனோ தயங்கினார் மகல் சாபதி். ஒருநாள் இரண்டு நாள் அல்ல, பல நாட்களாக வேப்பமரத்தடியின் கீழேயே உண்ண உணவு இல்லாமல் குடிக்க தண்ணீரும் இல்லாமல் நி்ஷ்டையிலேயே அமர்ந்திருந்தார் பாபா. வேப்பமரத்தின் பக்கமாக சீரடி மக்கள் பாபாவை பார்த்து கொண்டே வருவதும் – போவதுமாக இருந்தார்களே தவிர பாபாவிடம் ஏதாவது உணவு வேண்டுமா என்று கேட்க வேண்டும் என்ற எண்ணம் யார் மனதிலும் எழவில்லை.

 “நீ என்ன கொடுத்தாய் நான் திருப்பி கொடுப்பதற்கு“ என்று எதிர்பார்த்து செய்வது நம்முடைய குணம். ஆனால் பாபாவுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்காத ஷிரடி மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை தர சாய்பாபா காத்து கொண்டிருந்தார். பல நாட்கள் தியானத்திலேயே இருக்கிறாரே…! மழை வெயில் என்று கூட பாராமல், அப்படியே ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருக்கிறாரே…!“ என்று சீரடி மக்கள் பேசி கொண்டார்கள்.

 “இனி நமக்கென்ன என்றிருந்தால் நம் ஊருக்கு வந்திருக்கும் விருந்தினரை அவமானப்படுத்துவது போல் ஆகிவிடும்“ என்று தாமதமாக உணர்ந்த மகல் சாபதி, வேப்பமரத்தின் அருகில் வந்தார். தியானத்தில் இருந்த பாபாவை எப்படி அழைப்பது என்று தயங்கி கொண்டு இருக்கும் போது, உடனே கண்களை திறந்து “வாருங்கள்… இப்படி அமருங்கள்.“ என்று மகல்சாபதியை வரவேற்றார் பாபா.

 “அய்யா தாங்கள் யார்..? எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்..? உங்கள் பெயர் என்ன..? உங்கள் உறவினர் யாரேனும் இவ்வூரில் இருக்கிறார்களா…?“ என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார் மகல்சாபதி.

 சாபதியின் ஒரு கேள்விக்கு கூட பதில் பாபாவிடம் இருந்து வரவில்லை. “உங்களை நான் எப்படி அழைப்பது“ என்றார் சாபதி.

 பாபா, “உன் விருப்பம்“.

 கிருஷ்ணா, கண்ணா, நாராயணா, கோவிந்தா, பெருமாளே என்று எப்படி அழைத்தாலும், இறைவன் வருவான். பெயரே சொல்லாமல் அப்பனே என்றாலும் இறைவன் வருவான் இவரும் தெய்வீக அம்சத்துடன் இருக்கிறார். இவரை எப்படி அழைப்பது என்று யோசித்தபடி மௌனமாக இருந்தார் மகல் சாபதி.

 அவரின் மௌனத்தை புரிந்து கொண்ட சாய்பாபா,

 “என்னை எப்படி அழைப்பது என்று நீ தயங்குகிறாய். உயிர் இருக்கும் வரைதான் பெயர். இல்லாதவனை சடலம் என்கிறோம். பல வருடம் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவன் இறந்த உடன், அவனை பிரேதம் என்றுதானே அழைக்கிறீர்கள். அவன் தாய் தந்தை வைத்த பெயர் அதுவா..? பணம் வைத்திருப்பவனை பணக்காரன் என்கிறோம். பணம் இல்லாதவனை ஏழை என்கிறோம். ஆனால் ஏழைக்கு கூட உடுத்த உடை இருக்கிறது. சொந்த பந்தங்கள் இருக்கிறது. ஆனால் எனக்கு எதுவும் இல்லை. ஒன்றும் இல்லாதவனை பக்கிரி (பிச்சைகாரன்) என்றுதானே அழைப்பீர்கள். அந்த பெயரையே எனக்கு வையுங்கள்.“ என்றார் பாபா.. பக்கிரி என்று அழைப்பது மகல் சாபதிக்கு மனவேதனையாக இருந்தது.

 “எதற்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் இன்னும் சொல்லவில்லையே?“ என்றார் மகல்.

 “உனக்கு உயர்ந்த குணம் மகல்சாபதி. அதனால்தான் வேற்று மனப்பான்மை ஏதும் இல்லாமல் நீ என்னிடம் அதிகமாக அக்கறையும் அன்பும் செலுத்துகிறாய்.“ என்று கூறி இப்படியே பல மணி நேரம் பேசி கொ்ணடே இருந்தார்கள் இருவரும்.

 “சரி… அதிக நேரமாகிவிட்டது. நான் நாளை உங்களுக்கு உணவு கொண்டு வருகிறேன். அதை நீங்கள் மறுக்காமல் வாங்கி சாப்பிட வேண்டும்.“ என்று அன்பு கட்டளையிட்டு விடைபெற்றார் மகல் சாபதி.

 மறுநாள் தன் நண்பர்களான அப்பாஜோக்லேயிடமும் காசிநாத்திடமும், பாபாவை சந்தித்து பேசிய அனுபவத்தை விளக்கினார் மகல்சாபதி. உடனே இருவரும் மகல் சாபதியுடன் பாபாவை சந்திக்க உடன் சென்றார்கள்.

 “அல்லா மாலிக்“ என்று வந்த மூவரையும் வரவேற்றார் பாபா.

காலையில் ஆரம்பித்த சந்திப்பு இரவு வரை முடியாமல் நீண்டு கொணடே போனது. இதனால் பல ஆன்மிக தகவல்களை தெரிந்து கொண்டார்கள் மூவரும். 

 பைத்தியம், மனநிலை பாதிப்படைந்தவர் என்று பட்டம் கட்டிய மக்கள் பாபாவை நன்றாக உணர்ந்து கொண்டார்க்ள. “நம்மூர் வந்தவர் சாதாரணமானவர் இல்லை இறைவனின் மறு அவதாரம். ஓர் அற்புத மகான். பல தகவல்களை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்.“ என்பதை உணர்ந்து பாபாவிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

 “நான் யாரையும் தவறாக நினைக்கவில்லை.“ என்றார் பாபா.

 பாபாவின் காந்த கண்களும் வசீகரமான சிரிப்பும் தெய்வீகமான முகமும் சீரடி மக்களை கவர்ந்தது. பாபாவுக்கு உணவு கொடுக்க சீரடி மக்கள் முன் வந்தார்கள். பாபாவுக்கு உணவு கொடு்ப்பதால் நம்முடைய பாவத்தை பாபா வாங்கி கொண்டு நம்மை புண்ணியவானாக்குகிறார் என்பதை உணர்ந்தார்கள் சீரடிவாசிகள்.

 பாபா நம் இல்லத்திற்கு உணவு வாங்க வருவாரா என்று ஏங்கும் அளவிற்கு பாபாவின் அருமை தெரிந்து கொண்டார்கள். பலரும் பக்கிரி என்று பாபாவை அழைப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள். ஆனால் அமன்பாய் என்பவள் மட்டும் பாபாவை அப்படி அழைப்பதை விரும்பவில்லை. தன் மகன் அப்படி அழைத்தபோது கோபம் கொண்டு அவன் கன்னத்தில் அறைத்தாள் அமன்பாய்.

 “பெரியோர்களை அப்படி அழைக்க கூடாது. நமக்கு ஒரு ஆபத்து என்றால் ஒடி வந்து காப்பவன் இறைவன். அவரை நாம் “பாபா“ என்று அழைப்பது போல் இனி நாம் இவரையும் “பாபா“ என்றே அழைக்க வேண்டும்“. என்று கட்டளையிட்டாள்.

 பக்கிரி என்று அழைத்த வாயால் பாபா என்றே அழைக்க ஆரம்பித்தார்கள் ஷிரடி மக்கள். உடல்நலம் பாதிப்படைந்தவர்களுக்கு பாபாவின் ஆசியால் பூரண நலம் பெற்றார்கள். இதனால் பாபாவிற்கு வில்லனாக மாறினார் அங்கு இருக்கும் மருத்துவர். அவர் பாபாவை தன் விரோதியாகவே எண்ணினார். பாபாவினால் தன் வருமான குறைந்தது என்று கடும் கோபமும் எரிச்சலும் அடைந்தார். .

 டால்பின் எனும் மீன் இருக்கிறதே அது, கடலில் விழும் மனிதர்களை பத்திரமாக கரை சேர்க்கும் பணியும் செய்கிறது. ஆனால் அதையும் கொல்லும் கொடிய குணம் சில மனித மிருகங்களுக்கு இருக்கிறது. பாபா, துன்ப கடலில் துவண்டு போகும் மனிதர்களை காக்கும் டால்பின். அவரையும் விரோதியாக நினைத்து வீழ்த்த சமயம் பார்த்தார் வைத்தியர்.

 ஷிரடியில் மர்ம நோய் தாக்கியது. அது காலரா என்று கண்டறிந்தார்கள். அந்த காலரா நோய் வைத்தியரையும் தாக்கியது. அந்த வைத்தியரையும் காப்பாற்றினார் சாய் பாபா.

 சாய் பாபாவின் வைத்தியம் விசித்திரமானது.

 அது எப்படி தெரியுமா…?

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்

 

Feedback: editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here 

editor@bhakthiplanet.com

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Mar 10 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், ஸ்ரீ சாய்பாபா வரலாறு. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

1 Comment for ““பாபாவின் பார்வையே மகத்துவம்.“- மகான் சீரடி சாயிபாபா வரலாறு. பகுதி – 2”

  1. Sai Rajesh

    This article was extremely interesting, particularly because I was investigating for thoughts on this issue last Wednesday.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech