Monday 6th May 2024

தலைப்புச் செய்தி :

வெளிச்சம் இல்லாத இடத்தில் சாப்பிடக் கூடாது:சாஸ்திரம் தரும் விளக்கம் என்ன?

Written by Niranjana 

நல்ல வெளிச்சம் இல்லாத இடத்திலும், இருட்டாக  இருக்கிறபோதும் உணவு எதுவும் சாப்பிடக் கூடாது என்பது சாஸ்திர விதிமுறை. இன்று, விஞ்ஞானம் என்று சொல்வதை அன்றைய நம் முன்னோர்கள் சாஸ்திரம் என்றார்கள். வெளிச்சம் இல்லாத இருட்டான இடத்தில் சாப்பிடும் போது, உணவில் ஏதேனும் பூச்சிகள் விழுந்தால் அதை தெரியாமல் நாம் சாப்பிட்டுவிடக் கூடும். இதனால் சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்து நேரலாம். ஆகவே இருளில் சாப்பிடக் கூடாது என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றாலும், சாஸ்திரம் சொல்கிற சில விஷயங்களையும் தெரிந்துக் கொள்வோம்.

ஒரு தாய் தன் மகனுக்கு உணவு பரிமாறினாள். மகனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் விளக்கு அணைந்துவிட்டது. இதை கண்ட அவன் தாயார், “இரு. சாப்பிடாதே. விளக்கு ஏற்றி வைக்கிறேன். பிறகு சாப்பிடு” என்று சொல்லி ஒரு தீபததை ஏற்றி வைத்தாள்.

இதை கண்ட மகன், “ஏன் தீபம் ஏற்றி சாப்பிட வேண்டும்.? மகாபாரதத்தில் பீமன் சிறுவனாக இருந்த பருவத்தில், ஒருநாள் உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தபோது, தீபம் அணைந்தது விட்டது.  இருந்தாலும் பீமன் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. இதை கண்ட அர்ஜுனன், “பீமா..வெளிச்சம் இல்லை என்றாலும் நீ எப்படி சாப்பிட்டு கொண்டு இருக்கிறாய்? வெளிச்சம் வந்த பிறகு சாப்பிடு.” என்றான்.

அதற்கு பீமன், “நமது கை, உணவை சரியாக எடுக்கிறது. அதை சரியாக நம் வாய்க்கும் கொண்டு செல்கிறது. தினமும் இப்படி வழக்கமாக சாப்பிடும் நமக்கு எதற்கு வெளிச்சம்? இருட்டில் சாப்பிட்டால் கைகளால் எடுக்கும் உணவு, வாய்க்குள் போகாதா?” எனக் கேட்டான். அதைதான் அம்மா  நானும் உன்னை கேட்கிறேன்” என்றான் மகன்.

“நீயும் அந்த பீமனை போல கேட்டது சரிதான். இருளில் சாப்பிட்டாலும் உணவு தாராளமாக வாய்க்குள் போகும். ஆனால் யாருடைய வாய்க்குள் போகும் என்று சாஸ்திரம் சொல்கிறது தெரியுமா?.

“சொக்கா சொக்கா சோறுண்டா? சோழியன் வந்து கெடுத்தான்டா” என்ற ஒரு பழமொழி இருக்கிறது. ஏன் இந்த பழமொழி பிறந்தது தெரியுமா? அதை நீ தெரிந்துக்கொண்டால், நிச்சயம் நீ இருளில் சாப்பிடமாட்டாய்.  நீ மட்டும்மல்ல, யாரும் இருளில் சாப்பிட மாட்டார்கள்.

ஒருவர் இறந்துபோகிற தருவாயில் எதையாவது அந்த நபர் விரும்பும் போது உயிர் பிரிந்தால், அந்த நபருடைய ஆத்மா சாந்தியடையாது. அதனால் அந்த இறந்துபோன ஆத்மா விரும்பியதை யார் செய்கிறார்களோ அவர்களிடம் பங்கு கேட்க வரும். தொந்தரவு செய்யும். காரணம் உடல் அழிந்தாலும், ஆத்மாவுக்கு அழிவி்ல்லை.

சட்டவிதிமுறைகளை அனுசரிக்காமல் போனால் அரசாங்க தொந்தரவு ஏற்படுவதைபோல, சாஸ்திர விதிமுறைகளை சரியாக அனுசரிக்காத வீட்டில் துஷ்ட ஆத்மாக்களுக்கு கொண்டாட்டம் ஆகிவிடும் என்கிறது ஆத்ம சாஸ்திரம்.

சரி. ஆத்மாவுக்கும், இருளில் சாப்பிடுவதற்கும் என்ன சம்மந்தம்? சொக்கனும் – சோழியனும் யார்? என்பதை பற்றி சொல்கிறேன் கேள்.” என்ற அந்த தாய், சொக்கனும் – சோழியனும் யார் என்பதை சொல்ல தொடங்கினாள்.

சகோதரிகள்

ஒரு ஊரில் இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். இருவருக்கும் திருமணம் நடந்தது. மூத்த சகோதரியின் கணவர் எதிர்பாராமல் இறந்துவிட்டார். இதனால் மூத்தவள் தினக்கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் பிழைத்து வந்தாள். தினமும் இரண்டு படி அளவு அரிசி சமைத்து சாப்பிடுவாள். இரண்டு படி அரிசி சாப்பிட்டாலும் அவள் உடல், மெலிந்துதான் இருந்தது. சில நிமிடங்களில் மீண்டும் பசி எடுக்கும். பசியுடன் தூங்கிவிடுவாள்.

ஒருநாள் அவள், “நம் தந்தையின் வீட்டில் ஒரு ஆளாக்கு அரிசி கூட நம்மால் சாப்பிட முடியாது. அவ்வளவாக பசியும் எடுக்காது. ஆனால் இப்போது இரண்டு படி அரிசி சமைத்து சாப்பிட்டும் உடனே நமக்கு மீண்டும் பசி எடுக்கிறதே. என்ன காரணம்?.” என்று யோசிப்பாள்.

ஒருநாள் ஊரில் இருந்து அவளின் இளைய சகோதரி வந்தாள்.

சகோதரிகள் இருவரும் பேசிக்கொண்டே சமைத்தார்கள். மாலை விளக்கு வைக்கும் நேரம் வந்தது.

“அக்கா விளக்கு ஏற்று. இருளாக இருக்கிறது” என்றாள் இளையவள்.

“என் வருமானமே சொற்பம். அதிலும் இரண்டு படி அரிசி வாங்கி சமைத்து சாப்பிட்டாலும் எனக்கு அதுகூட போதவில்லை. இந்த லட்சணத்தில் விளக்கு ஏற்ற எண்ணெய் வாங்க ஏது பணம்?” என்றாள்.

அதற்கு இளைவள், ” இருளில் சாப்பிடக் கூடாது அக்கா” என்றாள்.

அதற்கு மூத்தவள், “இருளில் சாப்பிட்டால் மகாராணி தேய்ந்து விடுவாயோ” என்றாள் கோபமாக.

“ஆமாம். இருளில் சாப்பிட்டால் உன்னைபோல நானும் தேய்ந்துதான் விடுவேன். நீ முதலில் விளக்கு ஏற்றி வை.” என்றாள் தங்கை.

மூத்தவள் சலித்துக்கொண்டே ஏதோ கொஞ்சம் இருந்த எண்ணெயில் தீபம் ஏற்றினாள்.

“நீ சொன்னபடி விளக்கு ஏற்றிவிட்டேன். வந்து சாப்பிடு. இரண்டு படி அரிசி சமைத்து வைத்திருக்கிறேன். அது எனக்கே போதாது. நீவேறு வந்துவிட்டாய். பெருமாளே பிச்சை எடுத்ததாம். அதையும் பிடிங்கி தின்ன வந்ததாம் அனுமான். அந்த கதையாக நீ வந்தாய்.” என்றாள் மூத்தவள்.

“கவலைப்படாதே அக்கா. நான் ஒன்றும் அதிகமாக சாப்பிடமாட்டேன். நீ சாப்பாடு போடு.” என்றாள் தங்கை. பெரிய பானையில் சமைத்த இரண்டு படி சோறை கொண்டுவந்து வைத்தாள் மூத்தவள்.

அக்காவும் தங்கையும் சாப்பிட ஆரம்பித்தார்கள். அவர்களால் அதிகமாக சாப்பிட முடியவில்லை. சமைத்த சாப்பாடு பெரும் அளவில் மிச்சமாகிவிட்டது. இதை கண்ட மூத்தவள், ஆச்சரியம் அடைந்தாள்.

“இன்று என்னடி ஆச்சரியமாக இருக்கிறது? உன்னை பார்த்த சந்தோஷத்தில் எனக்கு பசிக்கவில்லையோ.? தினமும் இரண்டு படி அரிசி சமைத்து சாப்பிட்டாலும் என் பசி அடங்காது. இன்று கொஞ்சமாகத்தான் சாப்பிட்டேன். அதற்குள் வயிறு நிறைந்துவிட்டது, சாப்பாடும் மிச்சம் ஆகிவிட்டதே.” என்றாள் மூத்தவள்.

சொக்க சொக்க சோறுண்டா?

அப்போது வாசலில் இருந்து ஒரு வித்யாசமான குரல் கேட்டது.“சொக்க சொக்க சோறுண்டா?” என்ற கேள்வி குரல் ஒலித்தது.

“சோழியன் வந்து கெடுத்தான்டா” என்று பதில் ஒலித்தது இன்னொரு குரலில். இதை கேட்ட சகோதரிகள் திடுகிட்டார்கள்.

“யார் வெளியே பேசுவது? சோழியன் என்பது என் கணவர் பெயர் ஆயிற்றே.?” என்று தங்கை,  வெளியே வந்து பார்த்தாள். வீட்டின் வாசலில் இரண்டு பேய்கள் நின்று கொண்டிருப்பதை கண்டார்கள் சகோதரிகள். இருந்தாலும் சகோதரிகள் பயப்படவில்லை.

“நாங்களே பேய் ஒட்டும் குடும்பத்தில் பிறந்தவர்கள். எவ்வளவு தைரியம் இருந்தால் நீங்கள் என் அக்காவின் வீட்டு வாசலில் வந்து நிற்பீர்கள்.” என்று அதட்டினாள் தங்கை.

“அம்மா..எங்களை மன்னித்துவிடு. தெரியாமல் வந்துவிட்டோம். நாங்கள் இருவரும், யாருடைய வீட்டில் விளக்கு ஏற்றாமல் இருட்டில் சாப்பிடுகிறார்களோ அவர்களின் வீட்டுக்குள் புகுந்து அவர்கள் சமைத்த உணவை சாப்பிட்டு விடுவோம்.

இந்த வீட்டில் வசிக்கும் உன் அக்காள், எப்போதும் இருளில்தான் சாப்பிடுவாள். அவளுடன் நாங்களும் சாப்பிடுவோம். என் பெயர் சொக்கன். நான்தான் இருளான வீட்டை தேடி பிடித்து இவனிடம் சொல்வேன். அதனால்தான் இவன், “சொக்க சொக்க சோறுண்டா” என்று என்னை பார்த்து கேட்டான்.

நீ  உன் வீட்டுக்குள் விளக்கு ஏற்றியதால், நாங்கள் வீட்டிற்குள்  வர முடியவில்லை. உன் கணவர் பெயர் சோழியன். அதனால்தான் “சோழியன் வந்து கெடுத்தான்டா” என்று கூறினேன்.” என்றன அந்த பேய்கள்.

இது வெறும் கதை இல்லை. சாஸ்திரபடி பார்த்தால் இருளில் துஷ்டசக்திகளின் அட்டகாசம் இருக்கும். அதனால்தான் இருளில் சாப்பிடக்கூடாது என்கிறது சாஸ்திரம். இருளில் சாப்பிடுவது உடல்நலனுக்கும் நல்லதல்ல.” என்று கூறிக்கொண்டே, “விளக்கு ஏற்றி வைத்துவிட்டேன், இப்போது நன்றாக நீ சாப்பிடு.” என்றாள் தன் மகனிடம் அந்த தாய்.

பொது அறிவிப்பு:

BHAKTHIPLANET.COM இணையதளத்தில் வெளிவரும் ஆன்மிக கட்டுரைகள் – ஜோதிட கட்டுரைகள் – வாஸ்து கட்டுரைகள் மற்றும் அனைத்து கட்டுரைகளையும் வேறு இணையதளங்களில் வெளியீடுவதற்கும் – பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வதற்கும், புத்தகங்களாக வெளியீடுவதற்கும் அல்லது வேறு எந்த வகையில் வெளியீடுவதற்கும் BHAKTHIPLANET.COM நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக முன் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மீறினால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 N. JOTHI,

Advocate,

319. Law Chambers

Madras High Court,

Chennai – 104

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

Guru Peyarchi Palan 2014-2015  CLICK HERE

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

 

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech