Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

மயன் தந்த கட்டடக்கலை; வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி – 6

மயன் தந்த கட்டடக்கலை;

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி – 6

Click for Previous Part

by Vijay Krisshnarau

வாஸ்து சாஸ்திரம். இது கட்டடங்களின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும, ஒரு கட்டடத்தால் அதன் உரிமையாளருக்கும் – அதில் வசிக்கின்றவர்களுக்கும் எந்த மாதிரியான பலன்களை தந்திடும் என்பதை சொல்கிற ஒரு அற்புதமான கலை. இதனை நம் முன்னோர் காலத்தில் “மனையடி சாஸ்திரம்” என்று அழைத்தனர். இதிலே மனையடி சாஸ்திரத்திற்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் மிக பெரிய வேறுபாடுகளோ முரண்பாடுகளோ இல்லை என்றாலும் கூட, பல முக்கியமான நுணுக்கங்கள் சில சமயம் மாறுப்படுகிறது. இருந்தாலும் மனையடி சாஸ்திரம் என்று பார்த்தாலும் – வாஸ்து சாஸ்திரம் என்று பார்த்தாலும் இவற்றில் உள்ள அடிப்படையான கருத்து ஒன்று மட்டும்தான். அது, இந்த பூமியில் கட்டப்படுகிற எவ்வகை கட்டடங்கள் ஆனாலும் அவை கட்டட சாஸ்திர விதியின்படிதான் அமைக்க வேண்டும் என்கிற இக்கருத்தை எந்த பாகுபாடின்றி உறுதியாக நமக்கு சொல்கிறது.  

இந்த கட்டடகலை சாஸ்திரத்தை நாம் “வாஸ்து கலை” என்று அழைக்கிறோம். மனையடி சாஸ்திரத்திற்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் சில முக்கியமான நுணுக்கங்கள் வேறுப்படுகிறது என நான் முன்னர் சொன்னேன் அல்லவா. அந்த வேறுபாடுகள் என்னென்ன என்பதை நான் உங்களுக்கு விளக்கமாக சொல்கிறேன். அவை பற்றிய விஷயங்கள் தொடர்ந்து நீங்கள் நமது பக்தி பிளான்நெட்டில்   வருகிற எனது  கட்டுரைகளை தொடர்ந்து படிக்கும் போது புரிந்து கொள்வீர்கள்.

முதலாவதாக மனையடி சாஸ்திரத்தை இயற்றியவர் யார்? வாஸ்து சாஸ்திரத்தை இயற்றியவர் யார்? என்பதை தெரிந்து கொள்வோம்.

நம் தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டு, கட்டட சாஸ்திரகலைக்கென்றே பிறப்பெடுத்தவர் “மயன்” என்பவர் ஆவார். இவரை பற்றி நிறைய விஷயங்களை “இராமாயண காவியத்தில்” நாம் படித்து தெரிந்துக்கொள்ள இயலும். இந்த பூமியில் கட்டப்பட்ட அரண்மனைகள் – பெரும் ஆலயங்கள் பல மயனின் ஆலோசனையில் உருவாக்கம் பெற்றது என்று சாஸ்திர ஆராய்ச்சி நூல்கள் சொல்கின்றன. கட்டட சாஸ்திரத்தின் வளர்ச்சியே இவரால்தான் சிறப்பு நிலையை பெற்றது. புராணகாலத்தில் புகழ் பெற்ற பல மன்னர்கள் சிற்றரசர்கள் இவரின் முழு ஆலோசனையின் படியே ஆலயங்களை உருவாக்கி இருந்தார்கள். அவை இன்றும் சிறந்து விளங்குவதாக சொல்லப்படுகிறது. அந்த ஆலயங்களை பற்றிய ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டு இருக்கிறேன். புராணகாலத்தில் மயனின் மேற்பார்வையில் கட்டப்பட்ட கோயில்கள் பற்றி ஏதேனும் விவரம் தெரிந்தால் வாசகர்கள் எனக்கு தெரிவிக்கலாம். இந்த சிறப்பு வாய்ந்த கோயில்கள் பிற்காலத்தில் பல அரசர்களின் விருப்பபடி மாறுதல் பெற்றிருக்கிறது.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், மயனின் மனையடி சாஸ்திர நூல்களும் அவரின் ஆலோசனைகளும் கருத்துகளும், கோயில்கள் மற்றும் நகர கட்டமைப்பு – அரசர் சார்ந்த விஷயங்களாகவே இருந்த காரணத்தால், சாமானிய மக்கள் மனையடி சாஸ்திரத்தை ஏதோ இராஜவிஷயம் – பெரிய செலவு தரக்கூடிய விஷயம் என்று பயந்து, இக்கலையை அனுசரிக்க தவறினார்கள் அல்லது தயங்கினார்கள் என்றே சொல்ல வேண்டும.

ஆனாலும் கூட நீர் நிலைகள் (கிணறு போன்றவை) மனையின் அமைப்பு ஆகியவற்றை அக்காலத்தில் இருந்த பலர் ஓரளவு நன்கு புரிந்து, மயனின் கருத்துக்கு ஏற்ப, கிணறு போன்றவற்றை அமைத்து சிறப்பு பெற்றார்கள். அக்கால வீடுகள் சிலவற்றை இன்றும் நாம் பார்க்கும் போது, கிழக்கு பகுதியிலேயே கிணறு இருப்பதை நாம் கவனித்து இருக்கிறோம். கிழக்கு திசை, கிணறு அமைக்க சிறந்த திசை என்றாலும், அந்த கிழக்கு திசையிலேயே சிறந்த பகுதி எது? என்பதை பற்றி அக்காலத்தில் இருந்த பெரியோர்கள் பலருக்கே கூட தெரியாமல், தவறாக அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கில் கிணறு அமைத்து கொண்டதை இன்றும் கூட பழைய கட்டடங்களில் காண முடியும். ஆக, இதில் இருந்து நமக்கு தெரிய வேண்டிய செய்தி என்னவென்றால் கட்டடக்கலை சாஸ்திர நுணுக்கங்களை அனுசரித்துதான் நம்முடைய வீடு இருக்க வேண்டும் என்கிற ஆவல் நம் முன்னோர்கள் பலருக்கும் இருந்து இருக்கிறது.

Click for Next Part

 

 © 2011  bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jun 6 2011. Filed under வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech