Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

டிசம்பர் 1–ந்தேதி செவ்வாய் கிரகத்துக்கு திசை திரும்புகிறது மங்கள்யான்

புதுடெல்லி, நவ. 27–

மங்கள்யான் விண்கலம் வருகிற 1–ந்தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு திசை திருப்பப்படுகிறது.

செவ்வாய்கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி உள்ளது. ரூ.450 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியைச் சுற்றி வரும் மங்கள்யானின் சுற்று வட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2 லட்சம் கி.மீ. உயரத்துக்கு பல்வேறு சிக்கல்களுக்குப்பின் உயர்த்தப்பட்டது. சுற்று வட்டப்பாதையை உயர்த்தும்போது மங்கள்யானில் உள்ள சிறிய ராக்கெட்டுகள் இயங்கவில்லை என்றாலும் அதில் உள்ள எரிபொருள்கள் வீணாகாததால் ராக்கெட்டுகளை மீண்டும் இயக்கும் பணி நடந்தது. இதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர்.

தற்போது பூமியின் சுற்று வட்டப்பாதையில் 2 லட்சம் கி.மீ. தூரத்தை விண்கலம் எட்டி விட்டதால் அடுத்தகட்டமாக மங்கள்யானை செவ்வாய் கிரகம் நோக்கி திசை திரும்பும் பணி நடைபெறுகிறது. வருகிற 1–ந்தேதி இந்தப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு திசை திருப்புவது என்பது மிகவும் சிக்கலானது என்பதால் மங்கள்யானுக்கு இது முக்கிய கட்டமாகும். செவ்வாய் நோக்கி பயணத்தை திசை திருப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

ஏற்கனவே சுற்றுவட்டப்பாதையின் உயரத்தை அதிகரிப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டபோதும் விஞ்ஞானிகள் அதை வெற்றிகரமாக சமாளித்து விட்டனர். தற்போது டிசம்பர் 1–ந்தேதி முக்கிய கட்டம் என்பதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பதற்றத்தில் உள்ளனர்.

Posted by on Nov 27 2013. Filed under Headlines, இந்தியா, செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech