Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

காஞ்சி குமரக்கோட்டம் முருகன் கோயில்




நிரஞ்சனா NIRANJHANA

முருகப் பெருமானை வணங்கினால் சாதிக்க முடியாது என்பவர்களின் முன்னால் சாதித்து காட்டலாம். வறுமை ஓழியும். வம்சம் வளரும். நினைத்தது நடக்கும்.

முருகன் என்றால் அழகு – தைரியம் – ஆற்றல். தேவைபட்டால் தம் பக்தர்களை காக்க மனித உருவத்தில் நேரடியாக வந்து உதவும் அன்பு என்று முருகப் பெருமானின் புகழை சொல்லிக்கொண்டே போகலாம்.

கச்சியப்ப சிவாசாரியாருக்கு கந்தபுராணம் எழுத உதவினான் கந்தன். அதுபோல பாம்பன் சுவாமிகளின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது பார்ப்போம்.

முருகனின் கோபம் நமக்கு லாபம்

பிரணவ மந்திரத்தின் பொருள் என்ன? என்று பிரம்மாவை முருகன் கேட்க, அதற்கு திருதிருவென முழித்த பிரம்மாவை பார்த்து கோபம் அடைந்தார் முருகப் பெருமான். “நீங்களே இப்படி அரைகுறை புத்தியுடன் இருப்பதால்தான், உங்கள் படைப்பில் பிறக்கும் பூலோக மக்கள் பலரும் அரைகுறை புத்தியுடனும் மந்த புத்தியுடனும் தோன்றி, செய்யக் கூடாத செயல்களை செய்கிறார்கள்.” என்று சொல்லி பிரம்மாவின் தலையில் குட்டி அவரை சிறையில் அடைத்து படைக்கும் தொழிலை முருகப் பெருமானே ஏற்றார்.

பிரம்மா சிறையில் இருக்கிறார் என்ற தகவல் அறிந்த ஈசன், நந்திதேவரை அனுப்பி பிரம்மாவை மீட்டு வர சொன்னார். முருகப் பெருமானை சந்தித்த நந்தி தேவர், ஈசனின் கட்டளையை சொன்னார். ஆனால் முருகப்பெருமான் எதையும் கேட்கவில்லை.

“தெரிந்து செய்ய வேண்டிய ஒரு வேலையை, எதுவும் தெரியாமல், தெரிந்தது போல செய்வதினால் ஆபத்தான விளைவுகள்தான் நேரும். பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாதவர் இதுவரையில் படைக்கும் தொழிலை செய்து வந்ததே குற்றம். அதற்காகதான் பிரம்மாவை சிறையில் அடைத்தேன்.” என்று முருகப் பெருமான் கூற, வேறு வழியில்லாமல் ஈசனிடம் திரும்பி வந்து விஷயத்தை சொன்னார் நந்தி தேவர். பிரம்மாவை மீட்க ஈசனே முருகப் பெருமானிடம் பேசினார். நந்தி தேவரிடம் சொன்னதைதான் தந்தையிடமும் சொன்னார் முருகப் பெருமான். அன்னை சக்திதேவி, மகனை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் பலனில்லை.

“சரி பிரணவ மந்திரத்தின் பொருள் உனக்கு தெரியுமா?” என்றார் முருகப் பெருமானிடம் சிவபெருமான்.

“சட்டம் தெரியாமலா ஒருவனை குற்றம் சொல்ல முடியும்.?” என்றார் முருகப் பெருமான்.

“அப்படி என்றால் நீயே பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் சொல் பார்க்கலாம்.” என்றார் ஈசன்.

“தந்தையே எல்லாம் தெரிந்த தங்களுக்கு பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாதா என்ன.?” என்றார் கந்தன்.

“எனக்கு தெரியாதென்றே வைத்துக்கொள். நீ இப்போது சொல். பிரணவ மந்திரத்தின் பொருள் என்ன?” – ஈசன்.

“அப்படியென்றால் சொல்கிறேன். ஆனால், இங்கே நான் ஒரு ஆசிரியன். தாங்கள் என் மாணவன். ஆசிரியரிடம் ஒரு மாணவன் தன் சந்தேகத்திற்கு எந்த முறையில் விளக்கம் பெற வேண்டுமோ அதன்படி கேட்டால் சொல்வேன்.” என்றார் முருகப் பெருமான்.

சர்வேஸ்வரனும் அவ்வாறே ஒரு மாணவனாக ஆசிரியர் முன்பாக கைகட்டி வாய்பொத்தி முருகப் பெருமானிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார்.

முருகப் பெருமான் சொன்ன பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டு சிவபெருமான் மகிழ்ந்தார். மகனை பெரிதும் பாராட்டினார். தந்தையின் பாராட்டுதானே ஒரு மகனுக்கு இமாலய விருது. முருகப் பெருமானும் தந்தையின் பாராட்டில் மிகவும் மகிழ்ந்து, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை தெரிந்தவர் அல்லவா அவர். அதனால் பிரம்ம தேவனை விடுதலை செய்தார்.

தான் இருந்தாலும் சிவபெருமான் நம் தந்தை. தந்தைதான் ஞானம் தரும் முதல் குரு. அவரை சங்கடப்படுத்தி விட்டோமே என்று வருந்தினார் முருகப் பெருமான். தாய்-தந்தையின் மனம் நோக எதிர்த்து பேசுவது ஒரு தோஷகுற்றம்.

அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேடி காஞ்சி மாநகரம் வந்து, அங்கே முன்னொரு காலத்தில் அன்னை பார்வதிதேவி, ஈசனை நினைத்து வழிப்பட்ட ஒரு மாமரம் இருக்கும் அதே இடத்தில் முருகப் பெருமானும் “சேனாபதீசர்“ என்ற பெயரில் ஒரு சிவலிங்கம் அமைத்து சிவ வழிபாடு செய்து தோஷ நிவர்த்தி பெற்றார். இதனால் முருகப் பெருமானுக்கு “மாவடி கந்தன்” என்ற பெயரும் உண்டு.

கந்த புராணம் எழுத உதவிய கந்தன்

குமரகோட்டத்தின் அர்ச்சகராக இருந்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். இவர் முருகபெருமானின் தீவிர பக்தர். குமரகோட்டத்து முருகப்பெருமானின் நாமத்தை எந்நேரமும் உச்சரித்து கொண்டே இருப்பார். ஒருநாள் இவர் கனவில் முருகப்பெருமான் தோன்றி, “எம்முடைய சரித்திரத்தை “கந்தபுராணம்” என பெயரிட்டு எழுதுக.” என்றார்.

புராணத்தை தொடங்குவது எப்படி என யோசித்தார்

அன்னை பார்வதிதேவியும், முருகப் பெருமானும் ஈசனை நினைத்து வழிப்பட்ட ஏகாம்பரஸ்வரர் கோயிலின் மாமரம் இருக்கும் அதே இடத்தில் கச்சியப்ப சிவாசாரியார் அமர்ந்து கந்த புராணம் இயற்றினார்.

ஸ்கந்த புராணத்தின் முதல் வரியை எப்படி தொடங்கி எழுத ஆரம்பிப்பது? என்று தெரியாமல் யோசித்தார் சிவாசாரியார். முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு திருபுகழின் முதல் வரியை அருளியதை போன்று, கந்த புராணத்தின் தொடக்கத்தையும் கச்சியப்ப சிவாசாரியாருக்கு, “திகடசக்கரம்” என்று அடி எடுத்து தந்து அருளினார் முருகப் பெருமான். அதை தொடர்ந்து கந்த புராணத்தை எழுதி முடித்தார் கச்சியப்ப சிவாசாரியார்.

பிறகு ஒருநாள் அற்புதம் நிகழ்த்தினார் முருகன். கந்த புராணத்தில் இருந்த சில பிழைகளை முருகப் பெருமானே திருத்தி எழுதி வைத்தார். இதை கண்ட கச்சியப்ப சிவாசாரியார், கந்தனே கந்த புராணத்தின் சில இடங்களில் திருத்தி அங்கீகரித்ததை நினைத்து மகிழ்ந்தார்.

சாமி வரம் தந்தாலும் பூசாரி தடுப்பது போல, கந்த புராணத்தை குமரகோட்டத்தில் அரங்கற்றம் செய்தபோது, அங்கிருந்த பெரும் புலவர் ஒருவர், ”திகடசக்கரம்” என்றால் என்ன.? அதற்கு இலக்கண பொருள் என்ன?” எனக் கேட்டார்.

“இது முருகப் பெருமானின் திருவாய்மொழி. அதற்கு அவரே இலக்கணம். அதனால் நானும் அவரிடம் இதை பற்றி விளக்கம் கேட்கவில்லை.” என்றார் கச்சியப்ப சிவாசாரியார்.

“முருகபெருமானே வந்து இந்த முதல் வரியை எடுத்து தந்தாரா.? சரி அப்படியே முருகப்பெருமான் சொல்லி இருந்தாலும், அச்சொல்லின் பொருள் விளக்கம் இல்லாமல் புராணத்தை ஏற்றுக் கொள்ள இயலாது. ஏன் என்றால் நீ ஆரம்பித்த முதல் வரிக்கு இலக்கணமே இல்லை“ என்றார் அந்த புலவர்.

“இந்த புலவருக்கு விளக்கம் அளித்த பிறகுதான் நாமும் கந்த புராணத்தை வெளியிட முடியும்.” என்று கூறிவிட்டார் அரசர்.

முருகப்பெருமானின் அருளால் அவர் புகழ் போற்றி எழுதிய புராணம் அரங்கேறாமல் போனதே என்று மனம் வருந்தி அன்றிரவு அழுதார் கச்சியப்ப சிவாச்சாரியார். கச்சியப்பரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, “நாளை அரசவைக்கு செல்க. அங்கு நாம் வந்து அரசரிடமும், புலவரிடமும் திகடசக்கரத்தின் பொருள் சொல்வோம்.” என்றார்.

மறுநாள் கச்சியப்ப சிவாசாரியார் அரசவைக்கு சென்று, “என் சார்பாக ஒரு புலவர் இங்கு வந்து உங்கள் சந்தேகத்தை தீர்ப்பார்.” என்று கூறி முடிப்பதற்குள் ஒரு புலவர் அரசவைக்குள் வந்து, “கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய புராணத்தில் இலக்கணம் இல்லை என்று கூறிய புலவருக்கு, இக்கணம் நான் விளக்கம் தர வந்துள்ளேன். வீர சோழியம் என்ற நூலில் சந்திப் படலத்தில் பதினெட்டாவது செய்யுளில் “திகடசக்கரம்“ என்று தொடரும் இலக்கண விதி இருக்கிறது.” என்று கூறி, தமிழுக்கு முருகன். அந்த முருகனே இலக்கணத்தில் தவறு செய்வானா.? என்று கூறி கொண்டே மறைந்தார் விளக்கம் தந்த புலவர்.

அரசவையே அதிர்ந்து போனது. அரசரும் புலவர்களும், இங்கே வந்தது முருகப்பெருமான் என்பதை தெரிந்து, கச்சியப்ப சிவாச்சாரியாரை வணங்கினார்கள்.

கந்த புராணம் வெளியிடப்பட்டது.

அப்பா – அம்மாவை பார்த்தா போதுமா..?

ஏகாம்பரநாதர் கோவிலுக்கும், காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலுக்கும் சென்றால் கண்டிப்பாக குமரகோட்டம் செல்ல வேண்டும். அப்படி சென்றால் இன்னும் பலன் அதிகமாகவே கிடைக்கும்.

இதை பாம்பன் சுவாமிகளே தம் அனுபவத்தில் உணர்ந்தார். ஆம், ஒருசமயம் பாம்பன் சுவாமிகள் காஞ்சிபுரம் வந்து சில ஆலயங்களை தரிசித்துவிட்டு சென்னைக்கு திரும்ப நினைத்தார். அப்போது சுவாமிகள் போகும் வழியில் ஒரு சிறுவன் சுவாமிகளிடம், “என்ன சாமி… அப்பா – அம்மாவை பார்த்தா போதுமா…? அவங்க மகனை பார்க்க வேண்டாமா? அதோ பாருங்க குமரகோட்டம். அங்கேயும் போங்க.” என்றான்.

“நல்லது சொன்னாய். சரி, நீ யாருப்பா.” என்றார் சுவாமிகள்.

“கோயிலுக்கு வாங்க, அங்கே சொல்றேன்.” என்று குமரகோட்டத்துக்குள் ஓடி மறைந்தான் சிறுவன்.

தன்னிடம் பேசிய சிறுவன், முருகப் பெருமானே என்பதை உணர்ந்த பாம்பன் சுவாமிகள், குமரகோட்டம் முருகனை வணங்கினார்.

நாகதோஷத்தை போக்கும் முருகன்

பெருமாளுக்குதான் ஐந்து தலை நாகம் குடை பிடிக்கும். ஆனால் இந்த குமரகோட்டத்தில் முருகப்பெருமானுக்கு ஐந்துதலை நாகம் குடை பிடிக்கிறது.

குமரக்கோட்டம் குமரனை வணங்கினால் நாகதோஷம் நீங்கும். ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும் நீங்கும். காலசர்ப்ப தோஷத்தை யோகமாக்குவார் கந்தன். முருகனை நம்பிக்கையுடன் வணங்கினால்……. அதன் பலனை தெரிந்துக்கொள்ள மீண்டும் மேலே கட்டுரை தொடக்கத்தை படியுங்கள்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

 © 2013 bhakthiplanet.com  All Rights Reserved

தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும்.  ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.


Posted by on Jan 24 2013. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், முருகன் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech