Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

ரியல் எஸ்டேட்டில் லாபம் அடைபவர்கள் யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

ஒருவருக்கு தொழில் அமைவது என்றால் அது ஒரு மிக பெரிய அதிர்ஷ்டம். தெரியாத தொழில் செய்து கெட்டவர்கள் உண்டு. தெரிந்த தொழில் செய்து கெட்டவர்கள் கிடையாது என்பார்கள். காரணம் தெரிந்த தொழில் செய்பவர்களுக்கு, தொழில் நுணுக்கங்கள் தெரிந்திருக்கும். ஒரளவாவது லாப-நஷ்டங்களை கணிக்க இயலும்.

ஒரு தொழில் தொடங்கி அதில் லாபம் எதுவும் வருவதாக தோன்றவில்லை என்றால், உடனே அந்த தொழிலை விட்டுவிட்டு வேறு ஒரு புதிய தொழில் தொடங்குபவர்கள் உண்டு. அதிலும் சிலர், லாபம் தராத தொழிலை தொடர்ந்து செய்து அப்படியே இருப்பார்கள்.

இன்னும் சிலர் லாபம் வராமல் போவதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து, அதே தொழிலை லாபம் தரும் தொழிலாக மாற்றி காட்டுவார்கள்.

எது எப்படியோ, ஒரு தொழில் அல்லது வியபாரம் வெற்றிகரமாக நடைப்பெறுகிறது என்றுச் சொன்னால், அது  அவரவரின் திறமை ஒரு பக்கம் இருந்தாலும், அதிர்ஷ்டமும் கை கொடுக்க வேண்டும்.

அதிலும் ரியல் எஸ்டேட் என்கிற இந்த தொழில், பெரும் வருமானம் அல்லது லாபம் தருகிற தொழிலாக இருந்தாலும் கூட, இதிலே அனைவரும் சம்பாதித்து விடவில்லை.

பணக்காரர்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று சொல்வது எவ்வளவு அர்த்தமற்றதோ அதுபோல ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் அனைவருமே லாபம் கிடைத்து சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

சிலரே இந்த துறைக்கு வந்த உடனே லாபம் அள்ளுபவர்களாக இருக்கிறார்கள். சிலரோ ஒரு மனையில் பணத்தை முடக்கிவிட்டு, அதில் இருந்து வெளியே வர முடியாமல் திணறுபவர்களும் இருக்கிறார்கள்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஒரு நண்பர் பத்து வருடங்களுக்கு மேலாக ஒரு நிலத்தை விற்க முடியாமல் அல்லாடி வருகிறார். காரணம், அந்த நிலத்தை அவர் வாங்கும்போது பத்திரங்கள் சரியாக இருந்தது, வாங்கி பிறகு அதில் வில்லங்கம் இருப்பதாக தெரிந்தது. அதனால் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்க முடியாமல் திணறுகிறார். பெரும் பணம் அதிலே முடங்கி இருக்கிறது.

ரியல் எஸ்டேட் அதிபர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் என்பது ஒரு மாய தோற்றம். ஒரு சிலர்தான் இந்த ரியல் எஸ்டேட் துறையில் பணத்தை அள்ளுகிறார்கள்.

எனக்கு தெரிந்து இன்னொரு நண்பர், ஆரம்பத்தில் வெறும் சைக்கிளில் சென்று, எங்காவது நிலம்-மனை விற்பனைக்கு இருக்கிறதா? வீடு விற்பனைக்கு-வாடகைக்கு இருக்கிறதா? என்பதை தெரிந்துக்கொண்டு, தான் சேகரித்த தகவலை மட்டுமே வைத்துக்கொண்டு, வீடு-மனை வாங்க விரும்புகிறவர்களுக்கு சொல்லி, அதிலே கமிஷன் பெற்று, இன்று சமுதாயத்தில் பெரும் ரியல் எஸ்டேட் அதிபர் என்கிற அந்தஸ்துடன், கார்-பங்களா-புகழ் என்று உச்சத்தில் இருக்கிறார்.

இந்த நண்பர் ஆரம்ப காலத்தில் அலைந்து திரிந்து சேகரித்த ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தேவையான விவரங்கள்தான் அவருக்கு கை கொடுத்தது, அதிலே அவரின் உழைப்பு இருந்தது என்று சொன்னாலும், அந்த உழைப்புக்கு பலன் தர அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது.

இன்றைய ஜோதிட சிறப்பு கட்டுரையில், “யாருக்கு ரியல் எஸ்டேட் தொழில் கைகொடுக்கும்?” என்பதை பற்றி ஆய்வு செய்வோம்.

ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால் அவர்கள் ரியல் எஸ்டேட் துறையில் லாபம் அடைவார்கள். காரணம், செவ்வாய் பூமிகாரகன். குறிப்பாக இந்த செவ்வாய், லக்கினத்திற்கு 2,5,9,11-ல் இருந்து, குருவின் பார்வை பெற்றால், ரியல் எஸ்டேட் தொழில் பிரமாதமாக அமையும். இதே செவ்வாய், லக்கினத்திற்கு தனாதிபதி என்கிற 2-ம் அதிபதியுடனோ, பஞ்சாமாதிபதி என்கிற 5-ம் அதிபதியுடனோ, பாக்கியாதிபதி என்கிற 9-ம் அதிபதியுடனோ அல்லது லாபாதிபதி என்கிற 11-ம் அதிபதியுடனோ இணைந்து அதே இடத்தில் இருந்தாலும், ரியல் எஸ்டேட் தொழிலில் மாபெரும் வருமானத்தை வாரி வழங்கும்.

அதே சமயம், ஒருவருக்கு செவ்வாய் மறைந்திருந்தாலும் அதாவது லக்கினத்திற்கு 6,8,12-ல் செவ்வாய் இருந்தாலும் ரியல் எஸ்டேட் துறையில் பணத்தை வாரி வழங்குகிறது. அது எப்படி? என்று பார்த்தால், செவ்வாய் 6-8-12-ல் மறைந்திருந்தாலும், செவ்வாய் நின்ற சாரம் 2,5,9,11-க்குரிய சாரமாக இருக்கும்.

சரி. 10-ல் செவ்வாய் இருந்தால் ரியல் எஸ்டேட் தொழில் நன்கு அமையுமா? எனக்கேட்டால், நிச்சயம் அமோகமாக அமையும். ஆனால் அந்த செவ்வாய் நீச்சம் பெற்று இருக்கக் கூடாது.

அப்படி செவ்வாய் நீச்சம் பெற்று விட்டாலும், நீச்சம் பெற்றவனை சம சப்தம பார்வையாக இன்னொரு நீச்சம் பெற்ற கிரகம் பார்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு –

கடகத்தில் செவ்வாய் நீச்சம், மகரத்தில் குரு நீச்சம். இருவரும் சம சப்தம பார்வையாக பார்த்துக் கொண்டால், நீச்சனை நீச்சன் பார்த்தால் உச்சமான வாழ்க்கை நிச்சயம்.

எங்கிருந்தோ பணம், அந்த ஜாதகனை தேடி வரும்.

ஒரு ஜாதகத்தில் உச்சனை உச்சன் பார்க்கக் கூடாது.

அதாவது இது குறித்து ஜோதிடத்தில் ஒரு சொல் உண்டு.

நீச்சனை நீச்சன் பார்த்தால், நினைத்தது நடக்கும்.

அதுவே –

உச்சனை உச்சன் பார்த்தால், பிச்சை கேட்டாலும் பிச்சை கிடைக்காது.

அதாவது, ஒரு உச்சம் பெற்ற கிரகத்தை இன்னொரு உச்சம் பெற்ற கிரகம் பார்வை செய்யக் கூடாது என்பது ஜோதிட விதி.

ஆகவே அன்பர்களே, இதுவரையில் ரியல் எஸ்டேட் தொழில் லாபம் இல்லையே என வருத்தமா? உங்கள் ஜாதகத்தை கவனியுங்கள், அதில் உங்களுக்கு செவ்வாய் அருமையாக அமைந்திருக்கிறதா என பாருங்கள். அப்படி அமைந்திருந்தால், இன்று இல்லை எனினும் நாளை இதே ரியல் எஸ்டேட் தொழிலில் பெரும் லாபத்தை அடைந்து வெற்றி பெறுவீர்கள். என் நல்வாழ்த்துக்கள்.!

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation CLICK Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Nov 5 2012. Filed under Home Page special, Photo Gallery, ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech