Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

மீனவரை தேடி வந்து உதவிய செங்கழுநீர் அம்மன்

நிரஞ்சனா

அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில் வீராம்பட்டினம் – புதுச்சேரி மாவட்டம்.   

மீனவர் வீரராகவர்

பரதவர்கள். இவர்கள் கடல் சார்ந்த தொழில் செய்பவர்கள். 450ஆண்டுகளுக்கு முன்பு இந்த பரதவர் குலத்தில் பிறந்த வீரராகவர் என்ற மீனவர், தினமும் மீன் பிடிக்க கடலுக்கு செல்வார். தினமும் மீன்பிடித்துதான் சம்பாதிக்க வேண்டும். ஏனோ இவரின் வலையில் மட்டும் பெரிய அளவில் மீன்கள் கிடைக்காது. கடலில் மீன் பிடிக்கவில்லை ஒருநாள் செல்லவில்லை என்றாலும் அவர் குடும்பம் பசியில் வாடும். இப்படி வறுமையான நிலையில் இருந்தார் வீரராகவர்.

ஒருசமயம், செங்கழுநீர் ஓடைக்கு சென்று மீன் பிடிக்க வலை வீசினார். ஆனால் காலை பொழுது, மாலை பொழுதாகியும் எந்த மீனும் அவர் வலையில் சிக்கவில்லை. “கடைசி முறையாக வலை விரித்து பார்ப்போம். இந்த முறையும் மீன் கிடைக்கவில்லை என்றால் வீட்டுக்கு திரும்புவோம்.“ என்ற முடிவுடன் கடைசிமுறையாக வலையை கடலில் வீசி காத்திருந்தார். ஆச்சரியமாக வலையில் ஏதோ அகப்பட்டது. ஆனால் வலையை இழுக்கவே முடியாமல் திணறினார். ஏதோ கனமான பெரிய மீன் வலையில் மாட்டிக்கொண்டது என்று மகிழ்ச்சியடைந்து கடுமையாக முயற்சித்து வலையை கரைக்கு இழுத்து வந்தார்.

அவருடைய மகிழ்ச்சி நிலைக்கவில்லை. அந்த வலையில் பெரிய மரகட்டை இருப்பதை கண்ட வீரராகவர், மனம் நொந்து போனார். “இதற்காகவா இத்தனை சிரமம் பட்டேன்?“ என்ற வருத்தத்துடன் வலையில் கிடைத்த மரகட்டையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பினார். அந்த மரகட்டையை தன் வீட்டின் பின்புறமாக போட்டு வைத்தார்.

மரகட்டையில் இருந்து வந்த ரத்தம்

வீரராகவரின் மனைவி சமையலுக்கு அடுப்பு எரிக்க, தன் கணவர் கடலில் இருந்து கொண்டு வந்த மரகட்டையை இரண்டாக பிளக்க பெரிய கோடாரியால் அந்த மரத்தை வெட்டினாள். வெட்டுப்பட்ட அடுத்த நிமிடமே வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து ரத்தம் குபுகுபுவென வெளியேறியது. இதை கண்ட வீரராகவரின் மனைவி பயந்து அலறினாள். வீரராகவரின் மனைவியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தார்கள். அவளின் அலறலுக்கு காரணம் பார்த்து அவர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். மரக்கட்டையில் இருந்து ரத்தம் வடிகிறதே என வியந்து பார்த்தார்கள்.

அப்போது வீரராகவரும் வந்து பார்த்தார். இந்த மரக்கட்டை தெய்வீக தன்மை நிறைந்தது என்பதை உணர்ந்து, அந்த மரகட்டையை தன் வீட்டுக்குள் எடுத்து சென்று, வெட்டப்பட்ட இடத்தில் இருந்து வரும் ரத்தத்தை நிறுத்த, மஞ்சள் தடவினார். அத்துடன் சந்தனம் குங்குமம் பூவைத்து வணங்கினார்.

இப்படி தினமும் மீன் பிடிக்க கடலுக்கு செல்வதற்கு முன்னதாக அந்த மரகட்டைக்கு பூஜை செய்து புறப்படுவார். அதனால் அவருக்கு தினம் தினம் அதிகளவில் மீன்கள் கிடைத்தது. அவர் வீசிய வலையில் பெரிய மீன்கள் சிக்கியது. அவரின் வியபாரம் பெருகியது.

கனவில் வந்த ரேணுகாதேவி

ஒருநாள் வீரராகவர் கனவில் ரேணுகாதேவி அம்மன் தோன்றி, “நான் பல வருடங்களுக்கு முன்பு ஒர் இடத்தில் தவம் செய்தேன். நான் ஒரு மரக்கட்டையில் அமர்ந்து தவம் செய்தேன். அந்த மரக்கட்டைதான் உன் வலையில் சிக்கியிருக்கிறது. நீ செங்கழுநீர்ல் இருக்கும் காட்டுபகுதிக்கு செல். நான் தவம் செய்த இடம் எதுவென ஒரு பாம்பு உனக்கு வழிகாட்டும். உன் வீட்டில் நீ பூஜிக்கும் என் மரக்கட்டையை பீடமாக அமைத்து, “செங்கழுநீர் அம்மன்” என்று பெயரிட்டு வழிப்படு.” என்று அம்மன் வீரராகவரின் கனவில் கூறி மறைந்தார்.

மறுநாள், தாம் கண்ட கனவை ஊர் பெரியவரிடம் சொன்னார் வீரராகவர். சிலர் இதை நம்ப மறுத்தார்கள். இருந்தாலும் வீரராகவர் சொல்வது உண்மையா என்று கண்டறிய ஊர் பெரியவர்கள், வீரராகவரை அழைத்து கொண்டு செங்கழுநீரில் இருக்கும்  காட்டுபகுதிக்கு சென்றார்கள். அந்த காட்டு பகுதியில் ஒரு புற்றில் இருந்து  ஒரு பெரிய பாம்பு வெளிப்பட்டது. அந்த பாம்பு ஊர்ந்து செல்லும் வழியை பின்தொடர்ந்தார்கள். ஒரு இடத்தில் பாம்பு படம் எடுத்து, அந்த இடத்தின் தரையை மூன்றுமுறை தட்டியது. பிறகு மறுபடியும் அந்த பாம்பு தன் புற்றுக்குள் புகுந்தது.

இதை கண்ட ஊர்மக்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். அந்த இடத்தை தோண்டும் போது தெய்வீக அதிர்வுகளை உணர்ந்தார்கள். அதன் பிறகுதான் அந்த இடத்தில் அம்மன் சக்திபீடமாக இருக்கிறாள் என்பதை உணர்ந்தார்கள். பிறகு வீரராகவர், தன் வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்துவந்து பீடமாக அமைத்து, கழுத்துக்கு மேல் உள்ள அம்மன் முகத்தை எழுந்தருளச் செய்து, அதற்கு “செங்கழுநீர் அம்மன்’  என்று கனவில் சொன்ன ரேணுகாதேவியின் உத்தரவுப்படி பெயரிட்டார். இங்குள்ள அம்மன் “தேவதாரு” என்ற மரத்தால் ஆனவர் என்பது குறிப்பிடதக்கது.

புதுச்சேரி கவர்னர்

அம்மனுக்கு நடக்கும் தேர்திருவிழாவில்  புதுச்சேரி கவர்னர், தேர் வடத்தை இழுத்து விழாவை தொடங்கி வைப்பது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.

இங்கு அம்மன் தேவதாரு மரத்தால் ஆனவர்.

தேவதாரு மரம் பற்றி ஹுவாங் சான் மலை இயற்கை காட்சி மண்டலத்தின் நிர்வாக கமிட்டியின் பொறுப்பாளர் WANG HENG LAI, இந்த மரத்தை பற்றி விரிவாக கூறி இருக்கிறார். தேவதாரு மரம், கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டருக்குக் அதிகமான உயரமுள்ள இடங்களில் வளர்கின்றது. சுற்றுச்சூழல், எவ்வளவு மோசமாக இருந்தாலும் தேவாரு மரம் கம்பீரமாக வளரும் என்றார். அத்துடன் தன் நாட்டில் இருக்கும் இந்த அந்த மரத்தை, உலக இயற்கை செல்வ மர பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.

இப்படி தேவாரு மரம், தெய்வசக்தியால் படைக்கபட்டதை கண்டு சீனரான WANG HENG LAI ஆச்சரியத்துடன் கூறியதை கேட்கும் போது, நம் தமிழ்நாட்டில் இந்த தேவதாரு மரத்தால் ஆன இறைவியை வணங்கினால் எப்படிப்பட்ட துன்பங்கள் வந்தாலும், அதை தாங்கும் சக்தியும் அதில் இருந்து விடுப்படும் அறிவும் திறமையும் செங்கழுநீர் அம்மன் அருளால் ஏற்படும். இந்த அம்மனை வணங்கினால் வியபார விருத்தி ஏற்படும் என்பது தனிச் சிறப்பு.

Feedback: editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here 

 © 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Sep 23 2011. Filed under அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech