Thursday 2nd May 2024

தலைப்புச் செய்தி :

மன நோயாளியாக மாற இருந்த தன் பக்தனை பக்குவப்படுத்திய பாபா

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு

பகுதி 8

முந்தைய பகுதிக்கு செல்ல… 

நிரஞ்சனா  

ரேகே ஷீரடியை நோக்கி சென்றார்.சாய்பாபாவை பார்த்தவுடன் ரேகே  மனதில்  ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. ரேகேவை பார்த்தவுடன், “வா ரேகே… நீ வருவாய் என்று தெரியும். உன்ன விஷ்ணு பகவானே என்னிடம் அனுப்பியிருக்கிறார். வா என் அருகில். வந்து உட்கார்.“ என்றார் சாய்பாபா. நான் யார் என்பது பாபாவுக்கு எப்படி தெரிந்தது? பகவான் என் கனவில் சொல்லியது இவருக்கு எப்படி தெரியும். என்கிற கேள்விகளுடன் ரேகே, சாய்பாபாவின் அருகில் அமர்ந்தார்.

சாய்பாபாவை பார்த்த சந்தோஷத்தில், தான் கையோடு கொண்டு வந்த கேமராவில் சாய்பாபாவை பல கோணத்தில் படம் பிடித்தார் ரேகே. சாய்பாபா ஏதும் சொல்லாமல் அமைதியாக ரேகேவை கவனித்தார். பிறகு சில நாட்கள் சாய்பாபாவுடன் தங்கி இருந்தார் ரேகே. அப்போது ஒருநாள் ஒரு நபர் செவ்வாழை பழத்துடன் சாய்பாபாவை சந்திக்க வந்தார். அந்த பழத்தை தன் அருகில் இருப்பவரிடம் கொடுத்துவிட்டு பழத்தோலை ரேகேவிடம் கொடுத்து, “சாப்பிடு ரேகே“ என்றார் சாய்பாபா. பாபா ஏன் இப்படி சொல்கிறார் என்கிற குழப்பத்திலும் மனவருத்தத்திலும் அந்த பழத்தோலை வாங்கி விருப்பம் இல்லாமல் சாப்பிட்டார் ரேகே. மறுபடியும் இன்னொரு பழத்தோலை தந்து, “இதையும் சாப்பிடு ரேகே.“ என்றார் பாபா.

“சாதாரண வாழைப்பழத் தோலாக இருந்தாலும் பரவாயில்லை, இது செவ்வாழைத் தோல். கடினமாக இருக்கும். அத்துடன் துவர்ப்பாகவும் இருக்கும். இது சாய்பாபாவுக்கு தெரியாதா? ஏன் நம்மை இப்படி படுத்துகிறார்.?“ என்று சிந்தித்து கொண்டே சாப்பிட்டார் ரேகே. 

“ரேகே.. இந்தா… இப்போது பழத்தை சாப்பிடு.“ என்றார் பாபா. பழத்தை ருசித்து சாப்பிட்டார் ரேகே. “உனக்கு இதற்கு முன் துன்பத்தை தந்தேன். இப்போது சுவையை தந்தேன். அதுபோல் உன் வாழ்க்கையில் மிக பெரிய இழப்பு ஏற்படும். அதை முன்பே விஷ்ணுபகவான் உன் கனவில் கூறியிருப்பார். அந்த துன்பத்தை என்னால் மட்டுமல்ல இறைவனாலும் தடுக்க இயலாது. அதை எப்படி பொறுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதைதான் உனக்கு செவ்வாழைத் தோலை கொடுத்தேன். இத்தோலை நீ எவ்வாறு சகித்து கொண்டு சாப்பிட்டாயோ அதுபோல் வரப் போகும் துன்பத்தை நீ மன தெளிவுடன் ஏற்று சமாளிக்க வேண்டும்.“ என்றர் சாய்பாபா.

இதை கேட்ட ரேகேவுக்கு ஒன்றும் புரியவில்லை. தனக்கு அப்படி என்னதான் கஷ்டம் வரப் போகிறது? என்று சிந்தித்தார். பிறகு ஒரு சில நாட்கள் சாய்பாபாவுடன் தங்கிவிட்டு தன் சொந்த ஊருக்கு திரும்பி, தன் கேமிராவில் உள்ள சாய்பாபா புகைப்படத்தை பிரிண்ட் போட்டு பார்த்தார் ரேகே.

அதிர்ந்து போனார் ரேகே.  அந்த புகைப்படத்தில் சாய்பாபாவை சுற்றி பலர் நின்று கொண்டு இருந்தார்கள். ஆனால் சாய்பாபா அந்த படத்தில் காணவில்லை. எல்லா படத்திலும் யார் யாரோ இருந்தார்களே தவிர ஸ்ரீசாய்பாபா எந்த படத்திலும் காட்சி தரவில்லை. சாய்பாபா நின்ற இடம் மட்டும் வெற்றிடமாக இருந்தது.

இது நடந்து பல வருடங்களுக்கு பின்னர், ரேகேவுக்கு திருமணம் இனிமையாக நடந்து ஒரு குழந்தைக்கும் தந்தையானார் ரேகே. ஆனால் ஒரு விபரீதம் நடந்தது. ரேகேவின் செல்லக் குழந்தை ஒருநாள் இறந்துவிட்டது. “பகவான் என்று சாய்பாபாவை நம்பி வணங்கியும் தன் குழந்தையை சாய்பாபா காப்பாற்றி தரவில்லையே… இனி சாய்பாபாவை வணங்க போவது இல்லை.“ என்று விரக்தியுடன் இருந்தார் ரேகே. குழந்தையின் மரணம் தந்த அதிர்ச்சி ரேகேவை ஒரு மனநோயாளியை போல் மாற்றியது. ரேகேவின் மனைவியும் – உறவினர்களும், நண்பர்களும் கவலை அடைந்தார்கள். இப்படியே ரேகேவை விட்டுவிட்டால் முழுமையாக மனநோயாளி ஆகிவிடுவார் என்று வருந்தினார்கள்.

அப்போது ஒருநாள் ரேகே கனவில் ஸ்ரீசாய்பாபா தோன்றினார்.

“கர்மவினையை யாராலும் தீர்க்க முடியாது ரேகே. அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துதான் தீர வேண்டும். இதை நான் பல வருடங்களுக்கு முன்பே உனக்கு தெரியப்படுத்தினேன. மறந்துவிட்டாயா ரேகே. உலகத்தையே படைக்கும் பராசக்தியால் ஒரு குழந்தையை தன் வயிற்றியில் இருந்து பெற்று கொள்ள முடியவில்லை. அந்த வருத்தம் அவளுக்கும் உண்டு. சிவபெருமானின் மனைவியாக இருந்தும் அந்த பாக்கியம் அவளுக்கு கிடைத்ததா? இதற்கு என்ன சொல்வது?. அதுபோல் ஒருவன் விதிவசத்தில் இருந்து தப்பிக்க இயலாது. துவண்டு விடாதே ரேகே. கவலையை விடு. உன் கவலை உன் மீதும் அன்பு வைத்திருப்போரையும் துன்பம் அடைய செய்யும். நீ ஒரு ஆண்மகன். நீ இப்படி இருந்தால் உன் மனைவிக்கு யார் ஆறுதல்.? உன்னையே நம்பி வந்தவள் அவள். எழுந்திரு. என்னை வந்து பார்.“ என்று பாபா கனவில் கூறி மறைந்தார். மனக்தெளிவு பெற்றார் ரேகே. தன் கனவை தன் மனைவியிடம் சொல்லி மறு நாளே ஷீரடிக்கு சென்று சாய்பாபாவை சந்தித்தார் ரேகே.

இதன் பிறகு ரேகேவின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. ரேகே சிறந்த சொற்பொழிவு, உபந்நியாசம் என்று தீவிர ஆன்மிகத்தில் ஈடுப்பட்டு ஸ்ரீசாய்பாபாவின் செல்ல பிள்ளையாகவே மாறினார். இந்த நல்ல மாற்றத்தை கண்ட ரேகேவின் உறவினர்களும் நண்பர்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.  

இருபத்தேழு வருடங்களாக புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு பகவான் சாய்பாபா தந்த பிரசாதம் என்ன?. 

 இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்  

Feedback: editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

 © 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on May 5 2011. Filed under ஆன்மிகம், ஆன்மிகம், ஸ்ரீ சாய்பாபா வரலாறு. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech